கொஞ்சம் சொந்தத்திற்கு கொஞ்சம் காதலுக்கு கொஞ்சம் நட்பிற்கு
கொஞ்சம் கடமைக்கு
கொஞ்சம் இணையத்திற்கு
கொஞ்சம் சிரிப்பிற்கு
கொஞ்சம் கண்ணீருக்கு
கொஞ்சம் வலிக்கு
கொஞ்சம் நோய்க்கு
பிரித்து கொடுத்தபின் எனக்கு எதுவும் மிஞ்சவில்லை , கடந்த ஆண்டு..
அதற்காகவேனும் புது வருடத்தின்
என் முதல் வாழ்த்துக்கள் , எனக்கானது..
சிறு பிராயத்தில் தொலைந்து விடுமோ என்ற பயம்...
இளமையில் தொலைக்க மாட்டோமோ என்ற மயக்கம்...
பின்னர் தொலைத்து விடுவோமோ என்ற கவலை...
தொடர்கிறது தொலைந்து விட்டோமோ என்ற சந்தேகம்...
இறுதியில் தொலைய மாட்டோமா என்ற காத்திருப்பு...
தொலைதலிலும் தொலைப்பதிலும்
நிறைந்திருக்கிறது வாழ்க்கை...
பெங்களூருவின் வழக்கமான
போக்குவரத்து நெரிசல்..
என் பேருந்தின்
அருகே நிற்கிறது
ஒரு பள்ளி பேருந்து ..
ஒரு ஜன்னலின் ஓரமாய்
அமைதியாய் தனியாய்
அழுது கொண்டிருக்கும் சிறு பெண்..
என்னவாய் இருக்கும் காரணம்..
நான் அவ்வயதில் எதற்கு
இப்படி அமைதியாய் அழுதேன் ..
சில காரணங்களை
சொல்ல தெரிவதில்லை..
சொல்லி புரிவதில்லை ..
அவளுடைய காரணமாவது
சாதரணமானதாக இருக்கட்டும்.. சாதரணமானதாகவே இருந்துவிடினும்
சகுனம் சரியாக இல்லை
இந்த மொத்த சமூகத்துக்கும்...
துணி துவைத்து
ஓய்ந்து அமர்கையில்
நான் இருக்கும் பயமின்றி
துணி அலசிய நீரை
குடிக்கிறது ஒரு காகம்
எப்பிறவியில் எந்த மகனோ வைக்காத நீர் !
இப்பிறவியில் எந்த மனிதனும் வைக்காத நீர் !
தூரத்தில் பிரகாசிக்கிறது ஒரு பேரொளி
வழியெங்கும் நிறைந்திருக்கும் ஒரு பேரமைதி
இவை ரெண்டும்
என்னை விழுங்காமல் இருக்க
கையோடு சுமந்து திரிகிறேன்
"Angry bird" உம் "White Noise" உம்.
தேநீர் கோப்பைக்கு
வண்ணம் தீட்டி கொண்டே கேட்கிறாய்
வண்ண கலவை
சரியாய் இருக்கிறதா என்று ..
தீர்க்கமாய் இருக்கும்
உன் விழிகளை
மட்டும் பார்த்து சொல்கிறேன்
"அழகாய் இருக்கிறது " என்று ....
கார்த்திகை மாதம்
தேவர்களின் இரவு
மாலையில் விளக்கேற்றினாள் அம்மா...
மார்கழி மாதம
தேவர்களின் அதிகாலை
காலையில் விளக்கேற்றினாள் அம்மா...
எப்படி ஒரே நாளில்
என் இரவு விடியலாகிறது... தேவருடயதும் ..
யார் கணக்கு தவறு ?!?
உனக்கு என் மௌனம்
புரியவில்லை என்று ..
வார்த்தைகள் சேகரித்து
ஒத்திகை பார்த்து
ஒரு காலை தேநீரில்
ஒப்பித்தேன் அனைத்தையும்
பதில் எதிர்பார்த்து
உன் முகம் பார்கையில்
செய்திதாளில் இருந்து
முகம் திருப்பாமல் கேட்கிறாய்
"தெலுங்கானா பிரச்சனை எப்பொழுது தீரும் ?"
உனக்கு புரியவில்லையா ??